நான் படித்தது என்னவோ பாரதியார் பாடம் சொல்லிக்கொடுத்தப் பள்ளிக்கூடத்தில்தான் , ஆனால் என்ன அவர் பாடம் சொல்லிக்கொடுத்தக் காலத்தில் நான் பிறக்கவே இல்லை . பாரதியாரின் மார்பளவு சிலை எங்கள் பள்ளி நுழைவு வாசலில் உண்டு . அந்த ஊரை விட்டு வந்து வருடம் பல ஆனாலும் , டவுன் பஸ்சில் பள்ளிக்கூடத்தை நான் எப்போது கடந்து சென்றாலும் ,அப்போது பாரதியாரின் சிலையை எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை . அப்போது என்னில் சில நினைவுகளும் எட்டிப்பார்க்கும் .
அப்போது எல்லாம், தமிழ் வாத்தியார் வேட்டி தான் கட்டி இருப்பார் . ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார் பெரும்பாலும் இன் செய்து பேன்ட் அணிந்து இருப்பார் .
அன்று ஆங்கில வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்த போது , ஒரு சக மாணவன் பாடத்தைக் கண்டு கொள்ளாமல் தனது கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தான். அதைப்பார்த்த ஆசிரியர் பாடத்தை நிறுத்திவிட்டு அவனை எழுந்து நிற்கும்படி சொன்னார்.
பின்பு , எவன் ஒருவன் கால்களை ஆட்டுகிறானோ , அவன் கீழ் தரமான எண்ணங்கள் மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , பெண் ஆசை மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , அவன் வாழ்கையில் முன்னுக்கு வர இயலாது என்றும் , அவன் மீது பெரியவர்களுக்கு நல்ல எண்ணம் வரும் வாய்ப்பு இல்லை என்றும் , தன்னுடையக் கருத்தை ஆணித்தரமாய் வகுப்பில் சொல்லிக்கொண்டு இருந்தபோதே அந்த வகுப்பு முடிந்த அடையாளமாய் மணி
ஒலித்தது .
அடுத்து , உள்ளே வந்த தமிழ் வாத்தியார் இருக்கையில் அமர்ந்தவாறு ,
ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே இரையும் ....என்ற பாடலைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் , தனது கால்களை வேகமாக
ஆட்டிக்கொண்டே .............?